நெல்லை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு வருகிற மார்ச் 2ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடக்கிறது. இதுபோல் பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி நிறைவடைகிறது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 27ல் தொடங்கி ஏப்ரல் 13 வரை நடக்கிறது. பிளஸ்2 தேர்வுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கின்றன. கடந்த வாரம் விடைத்தாள் மற்றும் மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய டாப் சீட் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தொடர்ந்து டாப் சீட்டை விடைத்தாளுடன் இணைத்து தையல் இயந்திரத்தில் தைக்கும் பணி நடக்கிறது. பாடங்களுக்கு ஏற்ப விடைத்தாள் பக்க எண்ணிக்கை அமைக்கப்படுகிறது. இதற்கிடையே பிளஸ்1 மற்றும் பிளஸ்2 தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணி முடிந்ததால் அவை சென்னையில் இருந்து துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் முழுவதும் மூடப்பட்ட லாரிகளில் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.