பண்டிட்டுகளுக்காக புதிய 10 சிறப்பு நகரங்கள்: இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் புதுப்பித்து கட்டப்படும்...உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி

டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் புதுப்பித்து கட்டப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம்  தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், இம்மாநிலம் கடந்த அக்டோபர் 31ம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு, செயல்பட தொடங்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும்  பாகிஸ்தான், இந்தியா உடனான தூதரக உறவு, போக்குவரத்து ஆகியவற்றை நிறுத்தி கொண்டது. ஐநா உள்ளிட்ட சர்வதேச அரங்கிலும் இந்தியாவுக்கு எதிராக குற்றம் சாட்டி வருகிறது.

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக, புதிய சட்டசபை தொகுதிகள் எல்லை வரையறை மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளின் மறுசீரமைப்பு பணி துவங்கியுள்ளது. மேலும், ஜம்மு  காஷ்மீரை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காஷ்மீரை சேர்ந்த பண்டிட் குழுவினர் சந்தித்தனர். அப்போது, அவரிடம்,  பண்டிட்டுகள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதைக்கேட்ட அமித் ஷா, காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள 10 மாவட்டங்களிலும் பண்டிட்டுகளுக்காக 10 புதிய நகரங்கள் கட்டமைக்கப்படும் எனவும், தீவிரவாதிகளால் இடிக்கப்பட்ட, சேதபடுத்தப்பட்ட கோயில்கள் புதுப்பித்து கட்டப்படும் எனவும்  உறுதியளித்தார்.

Related Stories: