அண்ணாநகர்: வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் அமுல் (32). இவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் சதீஷ் (16), கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காணவில்லை. இதுகுறித்து அமுல் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், மாயமான சிறுவன் சதீஷ், அடித்து கொலை செய்யப்பட்டு, வில்லிவாக்கம் ஆடுதொட்டி முட்புதரில் சடலம் புதைக்கப்பட்டு இருப்பதாக அந்த பகுதி முழுவதும் தகவல் பரவியது. இதுபற்றி அறிந்த அமுல், உடனடியாக வில்லிவாக்கம் காவல் நிலையம் சென்று, இதுபற்றி கூறி கதறி அழுதுள்ளார்.