நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைமுறை மேற்கொள்ளலாம்: நடிகர் விஷால் வழக்கில் உத்தரவு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் நீதிமன்ற அனுமதியில்லாமல் தேர்தல் தேதியை அறிவிக்க கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆண்டு, ஜூன் 23ம்தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், தபால் ஓட்டுக்களை போட அனுமதிக்கவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். தீர்ப்பில், நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிந்த பின்பு எடுத்த எந்த முடிவுகளும் செல்லாது.  நடிகர் சங்கத்திற்கான மறு தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்படுகிறார்.

தேர்தல் அதிகாரி மூன்று மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும். வாக்காளர் பட்டியல் சரிபார்க்க பட வேண்டும் அதுவரை நடிகர் சங்க நிர்வாகத்தை  தனி அதிகாரி  கவனிப்பார் என்று கூறப்பட்டிருந்தது. தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தத. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர் சங்க தேர்தல் நடைமுறைகளை மேற்கொள்ளலாம், தேர்தல் தேதியை நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் அறிவிக்க கூடாது. விசாரணை பிப்ரவரி 20ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Related Stories: