சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 118.90 கிலோ மீட்டர் நீளமுள்ள மூன்று மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை விரைவில் முடிப்பதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மற்றும் மாதவரம் முதல் சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரையிலான 52.01 கிலோ மீட்டர் நீளமுள்ள வழித்தடங்களுக்கு நிதியுதவி வழங்க ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை ஒப்புதல் அளித்துள்ளது. விரிவான திட்ட வடிவமைப்புகள் தயாராக உள்ள நிலையில், இத்திட்டத்திற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய வளர்ச்சி வங்கி ஆகிய பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து, இரண்டாம் கட்டத்தின் எஞ்சியுள்ள, சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரையிலும், சோழிங்கநல்லூர் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும் மற்றும் சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை வரையிலுமான வழித்தடப் பகுதிகளுக்கு, நிதி திரட்டும் பணிகள் நடந்து வருகின்றன.