13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: கட்டிட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை

நாமக்கல்: நாமக்கல்  அருகே, 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட மேஸ்திரிக்கு  ஆயுள் தண்டனை விதித்து, நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாமக்கல்  மாவட்டம் வளையப்பட்டி அருகேயுள்ள ரெட்டையாம்பட்டி குறவர் காலனியை  சேர்ந்தவர் சுதாகர் (35). கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். அதேபகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி கோமதி (33). ராஜா இறந்த பிறகு, கோமதி  சுதாகரை, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். கோமதிக்கு 13 வயதில் ஏற்கனவே  ஒரு மகள் இருக்கிறார். 3 பேரும் ஒரே வீட்டில் வசித்துவந்தனர்.

இந்நிலையில் கடந்த 2015 டிசம்பர் 25ம் தேதி கோமதி வீட்டில் இல்லாத நேரத்தில்,  அவரது 13 வயது மகளை, சுதாகர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல குழும தலைவர் சிவகாம வல்லி, மோகனூர்  போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுதாகரை கைது  செய்து, மாவட்ட மகளிர் (மகிளா) நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசிரேகா, 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட மேஸ்திரி சுதாகருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

Related Stories: