புழல்: சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் இயற்கை உபாதை கழிக்கப்படுவதால், சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. தற்போது அதன் நீர் இருப்பு 2784 மில்லியன் கன அடி. இதில், சென்னை நகர மக்களின் தேவைக்காக விநாடிக்கு 87 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த புழல் ஏரியின் கரைகள் செங்குன்றம் பொதுப்பணி துறை அலுவலகத்தில் இருந்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாரவாரிகுப்பம், திருவள்ளூர் நெடுஞ்சாலை, ஆலமரம் பகுதிவரை சுமார் 2 கிமீ தூரத்துக்கு பரந்து விரிந்துள்ளன. எனினும், இந்த ஏரிக்கரை முறையான பராமரிப்பின்றி, தற்போது முற்றிலும் சேதமடைந்து, முட்புதர்கள் வளர்ந்து காடுபோல் உள்ளது.