சென்னை: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி தொழிலாளி இறந்தால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய கமிஷனர் கூறினார். தூய்மை பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் நலத்திட்டம், மருத்துவம் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்த ஆய்வு கூட்டம் திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் துப்புரவு பணியாளர்களின் மறுவாழ்வு தேசிய கமிஷனர் ஜெகதீஷ் ஹர்மேனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள், 526 ஊராட்சிகளில் தூய்மை பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா அவர்களுக்கு போதுமான அளவு மருத்துவ வசதிகள், மருத்துவ காப்பீடுகள் மற்றும் அவர்கள் பணியில் ஈடுபடுவதற்கு தேவையான கையுறைகள், காலுறைகள், முகமூடிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா, முறையான ஊதியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பது தொடர்பாக கேட்டறிந்தார்.