வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சீமான், திருமுருகன் காந்தி மீது வழக்கு: மாநகர போலீஸ் நடவடிக்கை

சென்னை: கடந்த 2018ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பின் போது வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 2018 அக்டோபர் 2ம் தேதி காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு சர்தார் படேல் சாலை காமராஜர் நினைவு மண்டபத்தில் உள்ள சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் சீமான் நிருபர்களிடம், தமிழக அரசுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

அதைதொடர்ந்து ஓராண்டு கழித்து கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் அஜூகுமார் வீடியோ ஆதாரத்தின்படி அளித்த புகாரை தொடர்ந்து கோட்டூர்புரம் போலீசார் ஐபிசி 153, 505(1),(பி)(சி) ஆகிய பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல், மே 17 இயக்கம் சார்பில் மயிலாப்பூர் மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி பேசினார். அப்போது, பிராமணர்களுக்கும் மற்ற சமூகத்தை சார்ந்தவர்களுக்கும் இடையே கலகம் மூட்டும்படி வேத இதிகாசங்களை பற்றி இழிவாக பேசியதாக வீடியோ ஆதாரத்தின் படி நேற்று முன்தினம் மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் அளித்த புகாரின் கீழ் மயிலாப்பூர் போலீசார், திருமுருகன்காந்தி மீது ஐபிசி 153(ஏ),(1),(ஏ)34 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: