சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக இருக்கும் 9 நீதிபதிகளை, நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜீயம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் மிகவும் பழமையான நீதிமன்றங்களுள் சென்னை உயர்நீதிமன்றம் ஒன்றாகும். இது கடந்த 1862ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. தமிழக மாநிலத்திற்கும், புதுவை யூனியன் பிரதேசத்திற்கு சேர்த்து ஒரே உயர்நீதிமன்றமாக இது செயல்பட்டு வருகிறது. இங்கு 74 நீதிபதிகள் மற்றும் ஒரு தலைமை நீதிபதியை நியமிக்கலாம். அதன்படி தற்போது உயர்நீதிமன்றத்தில் 56 நிரந்தர நீதிபதிகளும் கூடுதலாக 19 நீதிபதிகளும் உள்ளனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக்க கொலிஜியம் அனுமதி அளித்துள்ளது.