சென்னை: தங்கள் மீது அவதூறு பரப்புவதாக மருமகள் மீது ஐபிஎஸ் அதிகாரியின் தந்தை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திண்டுக்கலை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும் ஐபிஎஸ் அதிகாரியின் தந்தையான ராஜகுரு அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2017ம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையை சேர்ந்த அருணா என்பவருக்கும் ஐபிஎஸ் அதிகாரியாக பயிற்சி பெற்று வரும் எனது மகன் ஆனந்துக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு எனது மருமகள் அருணா மனபோக்கு சரியில்லை என்று எனது மகன் குடும்ப நல நீதிமன்றதில் விவாகரத்து கேட்டுள்ளார். வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது எனது மகன் எடுத்த முடிவு. இந்நிலையில் எனது மகன் புகழுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் 500 சவரன் நகை வரதட்சனையாக வாங்கியதாக பொய்யாக தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனது மருமகள் வீட்டில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் 500 சவரன் நகைகளை பறிமுதல் செய்யப்பட்டதாக திருமணத்திற்கு முன்பே அவரது தந்தை கூறினார். இதனால் நாங்கள் அவர்களிடம் எதையும் வரதட்சனையாக திருமணத்தின் போது கேட்கவில்லை.