சென்னை: அரசு பொதுத்தேர்வு முக்கிய பணிகளில் தனியார் பள்ளி ஆசிரியர்கள், முதல்வர்களை நியமிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மை காலமாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக 10 , 11ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்னும் ஒருசில வாரங்களில் தொடங்கவிருக்கக்கூடிய நிலையில், முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக அரசு தேர்வுத்துறை இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பெரும்பாலும் அரசு பணியில் இருக்கக்கூடிய அரசு ஆசிரியர்களையே இதுபோன்ற பொதுத்தேர்வுகளுக்கு கண்காணிப்பாளராகவும், அதற்கு மேற்பார்வையாளராகவும் நியமிக்க வேண்டும் என்று தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் வருகின்ற மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது.