சென்னை: சென்னை கே.கே நகரில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் அண்ணா சதுக்கத்திற்கு மாநகர பேருந்து (12ஜி) சென்று கொண்டிருந்தது. டிரைவர் மனோகரன் பஸ்சை ஓட்டி வந்துள்ளார். பேருந்து கே.கே. நகர் காமராஜர் சாலையில் வந்தபோது படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் 2 பேர் நின்றுள்ளனர். அவர்களை உள்ளே வரும்படி டிரைவர் கூறியுள்ளார். இதனால் அவர்கள் டிரைவரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது மாணவர்கள் தங்களது நண்பர்களுக்கும் போன் செய்து வரவழைத்தனர். பைக்கில் வந்த 2 வாலிபர்கள் மாணவர்கள் 2 பேருடன் சேர்ந்து டிரைவர் மனோகரனை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர்.