நாக்பூர்: மகாராஷ்டிராவில் காதலை ஏற்க மறுத்ததால் தீ வைக்கப்பட்ட கல்லூரி ஆசிரியை, ஒரு வாரத்திற்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிராவின் வார்தா மாவட்டத்தில் உள்ள தரோடா கிராமத்தை சேர்ந்தவர் அங்கிதா பிசுடே(25). கல்லூரி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இதே கிராமத்தை சேர்ந்தவர் விகேஷ் நாக்ராலே(27). இருவரும் நட்பாக பழகி வந்தனர். ஆனால் விகேஷின் மோசமான நடவடிக்கைகளால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருடனான நட்பை அங்கிதா துண்டித்துக் கொண்டார். விகேஷுக்கு திருமணம் ஆகி 7 மாத ஆண் குழந்தை உள்ளது. இருந்தாலும் தொடர்ந்து அங்கிதா பின்னால் சென்று தொந்தரவு கொடுத்து வந்தார். இந்த நிலையில், கடந்த 3ம் தேதியன்று அங்கிதா கல்லூரிக்கு செல்லும்போது அவரை பின்தொடர்ந்து சென்ற விகேஷ், தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை அங்கிதா மீது ஊற்றி தீ வைத்தார்.