பழநி: பழநி தைப்பூச திருவிழா தேரோட்டம் பக்தர்களின் அரோகரா கோஷங்கள் முழங்க கோலாகலமாக நடந்தது. இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் தைப்பூச திருவிழா பிப். 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம், வெள்ளி தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. முத்திரை நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 5 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமரசுவாமி தோளுக்கினியாளில் சண்முக நதிக்கு எழுந்தருளல், காலை 11 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோயிலில் சுவாமி தேரேற்றம் நடந்தது. மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது.
பெரியநாயகி அம்மன் கோயில் முன்பிருந்து விநாயகர், வீரபாகு ஆகியோர் தனித்தனி தேர்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச தேர் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தைப்பூச தேரோட்டத்தையொட்டி நேற்று முன்தினம் முதலே பழநியில் பல லட்சம் பக்தர்கள் குவிய துவங்கினர். நகர் முழுவதும் பச்சை, காவி உடை உடுத்திய மனித தலைகளே தென்பட்டன. பக்தர்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும், பறவைக்காவடி எடுத்தும் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற நேர்த்திக்கடன் செலுத்தினர்.