இந்தியர்களை மீட்க உதவியதற்கு நன்றி: கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க இந்தியா உதவத் தயார்...சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி கடிதம்

டெல்லி: சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது அந்நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும்  அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும்  நிலையில், உகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை நேற்று 723 ஆக உயர்ந்திருந்தது. இதேபோன்று 34,598 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது என சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களில் அமெரிக்காவை  சேர்ந்த 60 வயது நிறைந்த பெண் ஒருவர் உகான் நகரிலுள்ள ஜின்யின்டாங் மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார். இதேபோன்று உகான்  நகரில் மருத்துவமனையில் நிம்மோனியா காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஜப்பான் நாட்டை  சேர்ந்த 60 வயது நபர் ஒருவரும் உயிரிழந்து உள்ளார். இதனால் அமெரிக்கா மற்றும் ஜப்பான் என  முதன்முறையாக வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 81 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 803 ஆக உயர்வடைந்து உள்ளது. கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சார்ஸ்  வைரஸ் தாக்குதலுக்கு 774 பேர் பலியாகி  இருந்தனர். இந்த எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை சீன அரசு மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 3.45 லட்சம்  பேருக்கு நோய்க்கான அறிகுறி இருப்பதாகவும், 1.89 லட்சம் பேர் மருத்துவ பரிசோதனையில் இருப்பதாகவும் சீனா தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஹூபே மாகாணத்தில் தவித்த இந்தியர்களை மீட்க உதவியதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க இந்தியா உதவத் தயார்  என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories: