திருமண நாள் கொண்டாட்டத்தின் போது கடலில் மூழ்கி இளம்பெண் பலி: கணவன், குழந்தை கண்முன் சோகம்

துரைப்பாக்கம்: பாலவாக்கம் கடற்கரையில் 2ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியபோது கடலில் மூழ்கி இளம்பெண் பலியானார்.  கணவன், குழந்தை கண்முன் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. வேலூர், காகிதப்பட்டறை கிராமம் நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (30). இவரது மனைவி வேணி சைலா (27). தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்தார். தம்பதிக்கு ஒரு வயது குழந்தை உள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னை அடுத்த கானத்தூரில் உள்ள நண்பர் வீட்டுக்கு தம்பதி வந்துள்ளனர். பின்னர் நேற்று முன்தினம் மாலை விக்னேஷ், அவரது மனைவி வேணி சைலா, குழந்தை மற்றும் நண்பர்கள் ஆகியோர் பாலவாக்கம் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது விக்னேஷ்-வேணி சைலா ஆகியோருக்கு 2ம் ஆண்டு திருமண நாள் என்பதால், கணவருக்கு மோதிரம் அணிவதற்கு தம்பதி கடலுக்குள் இறங்கியுள்ளனர்.

அப்போது திடீரென வந்த ராட்சத அலை, இருவரையும் கடலுக்குள் இழுத்து சென்றது. இதனால், அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனே காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். சத்தம்கேட்டு மீனவர்கள் ஓடி வந்து  கடலுக்குள் இறங்கி தேடியும் வேணி சைலாவை மீட்க முடியவில்லை. விக்னேஷ் நீந்தி கரைக்கு வந்துவிட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை அதே பகுதியில் வேணி சைலா உடல் கரை ஒதுங்கியதாக நீலாங்கரை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: