தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள மதுரை தோப்பூரில் ஜப்பானிய நிதிக்குழு ஆய்வு

மதுரை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள மதுரை தோப்பூரில் ஜப்பானிய நிதிக்குழு ஆய்வு செய்தது. திருமங்கலம் அருகே தோப்பூரில் நடைபெற்று வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல்கட்ட பணிகளை ஜப்பானிய குழு ஆய்வு செய்தது. மத்திய அரசின் 2015ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, 3 ஆண்டு இழுபறியாகி, 2018ல் மதுரை தோப்பூரில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, 2019 ஜனவரி 27ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான மொத்த மதிப்பீடு ரூ.1,264 கோடியாகும். 224.42 ஏக்கர் பரப்பில் உடனடியாக கட்டுமான பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அடிக்கல் நாட்டி 10 மாதங்களாகியும் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. ஏனென்றால் மத்திய அரசு நிதி ஒதுக்காமல் இருந்தது. கடந்த ஜூலையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் நிதிஒதுக்காதது ஏமாற்றமளித்தது. உலக வங்கியில் கடன் வாங்கி எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி கடந்த ஜூலையில் உலக வங்கியின் ஜப்பான் நாட்டு குழுவினரும், மத்திய அரசு குழுவினரும் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமையும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தி சென்றனர். இதனையடுத்து முதல்கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கியது. இதன்பின்னர் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள மதுரை தோப்பூரில் ஜப்பானிய நிதிக்குழு ஆய்வு செய்தது.

Related Stories: