வாலிபருக்கு வெட்டு ஆட்டோ டிரைவர் கைது

தண்டையார்பேட்டை: பைக்கில் உட்கார்ந்து இருந்தவரை இறங்க கூறிய தகராறில் வாலிபரை கத்தியால் வெட்டிய  ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டை, அம்மணி அம்மன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்  பார்த்தசாரதி (25). இவர், மயிலாப்பூரில் உள்ள தனியார் செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பார்த்தசாரதி புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையின் உள்ளே சென்று வந்தார். அப்போது  தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் யாரோ ஒரு நபர் உட்கார்ந்திருந்தார். இதை பார்த்த பார்த்தசாரதி தனது பைக்கில் இருந்து அவரை இறங்குமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் இறங்க மறுத்து தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும்  வாக்குவாதம் முற்றியதது. அப்போது அவர் ஆட்டோவில் இருந்த கத்தியை எடுத்து பார்த்தசாரதியின் தலையில் வெட்டியுள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் துடித்தார்.

தகவலறிந்து புதுவண்ணாரபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தசாரதியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தண்டையார்பேட்டையை சேர்ந்த ஆட்டோ  டிரைவர் அலெக்ஸ் பாண்டியன் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: