பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு இந்தியா முழுவதும் 1.8 லட்சம் எல்ஐசி ஊழியர்கள் போராட்டம் : 10 லட்சம் முகவர்கள் பங்கேற்பு

சென்னை: எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா முழுவதும் 1.8 லட்சம் எல்ஐசி ஊழியர்களும், 10 லட்சம் முகவர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். எல்ஐசி  பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள எல்ஐசி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து ஊழியர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதும் நேற்று பகல் 12 மணி முதல் 1 மணி வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எல்ஐசியில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் என மொத்தம் 1.8 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இதேபோல் முகவர்களாக பணியாற்றும் 10 லட்சம் பேரும் கலந்துகொண்டனர். இவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். அதன்படி சென்னை, அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகத்தின் முன்பு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு பல்வேறு பதவிகளில் சுமார் 900 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அதேபோல மதுரை, ஈரோடு, சேலம், கோவை, திருச்சி என மண்டல அலுவலகம் முன்பு வேலைநிறுத்தம் நடந்தது.

Related Stories: