பழத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் ஜல்லிக்கட்டு காளை பரிதாப பலி

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கொய்யாப்பழத்தில் விஷத்தை கலந்து கொடுத்ததால், ஜல்லிக்கட்டு காளை பரிதாபமாக பலியானது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டி மன்னர் திருமலை தெருவை சேர்ந்தவர் பிச்சை. ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்தார். இதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து ஜல்லிக்கட்டு காளைக்கான தீவனத்தை பயிரிட்டு வந்தார். மாலை நேரத்தில் ஜல்லிக்கட்டு காளையை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுவது வழக்கம்.

நேற்று மேய்ச்சலுக்காக காளையை தோட்டத்தில் பிச்சை கட்டியிருந்தார். மாலையில் சென்று பார்த்த போது காளை இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகில் கிடந்த கொய்யாப்பழத்தில் குருணை மருந்து கலந்திருந்தது தெரிந்தது.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசில் பிச்சை புகார் செய்தார். புகாரில், கொய்யாப்பழத்தில் விஷம் கலந்து கொடுத்து, காளையை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், அய்யம்பட்டி, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, ஜல்லிக்கட்டுகளில் கலந்து கொண்ட காளை, உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: