சென்னை: தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்கள் அருணன் மற்றும் உதயகுமார் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: திருச்சியில் நடந்த ஒரு கொலையையொட்டி தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேவையற்ற பிரச்னைகளை கிளப்பி வகுப்புவாத மோதலைக் கிளறிவிடும் முயற்சியை செய்துள்ளார். திருச்சி காந்தி மார்க்கெட்டில் விஜய ரகு என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் இந்த கொலை மதரீதியாக நடந்துள்ளது.இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் திமுக உள்ளிட்ட சில அரசியல் இயக்கங்கள் தொடர்ந்து செயல்படுகின்றன, அதனால் இந்து பயங்கரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என்று பேசியுள்ளார்.