சென்னை: தமிழக மின்சாரவாரியத்தில் ‘எஸ்ஆர்-புக்’ முழுவதையும் டிஜிட்டல் மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக மின்சாரவாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ‘எஸ்ஆர்-புக்’ பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஊழியர்களின் ஜிபிஎப்-சிபிஎஸ் எண், தொழிலாளர் விபரம், நிரந்தர முகவரி, தற்காலிக முகவரி, குடும்ப விபரம், பிறந்த தேதி, கல்வித்தகுதி, பாஸ்போர்ட் விபரம், ரத்தவகை போன்ற பல்வேறு விபரங்கள் இடம்பெற்றிருக்கும்.
இந்த புத்தகம் அந்த, அந்த கோட்ட அலுவலகத்தில் மட்டும் இருக்கும். தலைமை அலுவலகத்தில் இருந்து கேட்கும் பட்சத்தில், அனுப்பி வைக்க வேண்டும். அப்போது காலதாமதம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே இதைத்தடுக்கும் வகையில் சம்மந்தப்பட்ட புத்தகத்தை முழுவதும் டிஜிட்டல் மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இவ்வாறு டிஜிட்டல் மயமாக்கப்படும் பட்சத்தில் தலைமை அலுவலகத்திலிருந்து அனைத்து தகவல்களையும் நேரடியாக கண்காணிக்க முடியும்.