முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது: பட்ஜெட், கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து முக்கிய ஆலோசனை

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை காலை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள முக்கிய திட்டங்கள், கொரோனா வைரஸ் தடுப்பு, தொழில் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையின் 2020ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்றது. முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இதையடுத்து 3 நாள் கவர்னர் உரை மீது விவாதம் நடைபெற்று 9ம் தேதி பேரவை கூட்டம் முடிவடைந்தது. தொடர்ந்து கடந்த 20ம் தேதி இந்தாண்டுக்கான முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக அரசின் பட்ஜெட் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் தூத்துக்குடியில் 40 ஆயிரம் கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. பட்ஜெட்டை எந்த தேதியில் தாக்கல் செய்யலாம், பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடலாம் என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல், மேலும் தேர்தல் நடைபெறாமல் உள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால், நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories: