சென்னை: மத்திய பட்ஜெட்டில் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் கோரிக்கையை புறக்கணித்ததை கண்டித்து நாளை மாநிலம் முழுவதும் சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபடும் என்று மாநில தலைவர் சவுந்தரராசன், பொதுச்செயலாளர் சுகுமாறன் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சமர்ப்பித்த பட்ஜெட்டில் பொருளாதாரத்தில் தொடர்ச்சியான மந்தநிலை, வேலையின்மையின் அபாயகரமான உயர்வு, மக்களின் வறுமை பெருகுவது, விலைவாசி உயர்வு, மக்களின் துயரங்கள் அதிகரித்தல் போன்ற பிரச்னைகளில் எந்த தீர்வும் குறிப்பிடப்படவில்லை. கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு உறுதி செய்யும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, திட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமுக பாதுகாப்பு, கோடிக்கணக்கான முறைசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு என உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க எந்தவித அம்சங்களும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.