சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சுவாமிக்கு படைக்கும் பிரசாதம் சுத்தம், சுகாதாரம் இல்லாமல் தயாரித்து, அதை பக்தர்களுக்கும் விநியோகித்த விவகாரம் தொடர்பாக, கோயில் நிர்வாக அதிகாரிக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் கோயில், மிகவும் பழமை வாய்ந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த கோயிலில் சுவாமிக்கு நெய்வேத்தியமாக படைக்கும் கேசரியில் ரசாயன பவுடர் மற்றும் கலர் பவுடர் கலந்து படைப்பதாகவும், பின்னர் அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதாகவும், அதை சாப்பிடும் பக்தர்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் காஞ்சிபுரத்தை சேர்ந்த தினேஷ்பாபு என்ற பக்தர், காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அனுப்பினார். அதன்பேரில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன ஆலுவலர் அனுராதா தலைமையில், அலுவலர் தீபா உள்பட அதிகாரிகள் நேற்று முன்தினம் ஏகாம்பரநாதர் கோயிலில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கோயில் மடப்பள்ளி சுத்தம், சுகாதாரம் இல்லாமல் இருப்பதும், அங்கு பூச்சிகள், எலிகள் இருந்ததும், கேசரியில் கலப்பதற்காக கலர் பவுடர் இருந்ததும் தெரிந்தது.