சென்னை: குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை நீக்கிவிட்டு புதிதாக 39 பேருக்கான ரேங்க் பட்டியலை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் (2018-19, 2019-20ம் ஆண்டுக்கானது) காலியாக உள்ள 9,398 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடத்தியது. சுமார் 16.30 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தொடர்ந்து நவம்பர் 12ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 39 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்தனர். அனைவரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதனால் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது சம்பந்தமாக நடந்த விசாரணையில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் வந்துள்ள 39 தேர்வர்களுக்கு பதில் தகுதியான வேறு 39 பேர் தெரிவு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.