தண்டவாளத்தில் திடீர் விரிசல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தப்பியது: அம்பத்தூர் அருகே பரபரப்பு

சென்னை: அம்பத்தூர் அருகே தண்டவாளத்தில் விரிசல் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம் வழியாக ஏராளமான மின்சார ரயில்களும், எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அம்பத்தூர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் தண்டவாளத்தை ரயில்வே ஊழியர்கள் வழக்கம்போல ஆய்வு செய்தனர். அப்போது ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து உடனடியாக ஊழியர்கள் அம்பத்தூர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரயில்வே பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஊழியர்களின் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு தண்டவாள விரிசலை சரிசெய்தனர்.

இதன்காரணமாக சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் சுமார் அரைமணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. தண்டவாள விரிசலை சரியான நேரத்தில் ஊழியர்கள் கண்டுபிடித்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுபற்றி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: