ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டதால் ரயில் விபத்துகள் குறைந்துள்ளது; தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்

சென்னை: ரயில்வே ஊழியர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டு வருவதால் ரயில் விபத்துகள் குறைந்துள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார். 71வது குடியரசு தின விழா நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தெற்கு ரயில்வே  பொது மேலாளர் ஜான் தாமஸ் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் பேசியதாவது, “சென்னையில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டபோது ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டுவர தெற்கு ரயில்வே உதவியது. கடலூரிலிருந்து மயிலாடுதுறை வரையிலான 74 கிலோ மீட்டர் தூரத்திற்கு  மின்மயமாக்கல் பணி, திருவாரூரில் இருந்து காரைக்கால் துறைமுகம் வரையிலான 40 கிலோ மீட்டர் தூரத்திற்கான மின்மயமாக்கல் பணிகள் முடிவுற்று வருகிற மார்ச் மாதத்தில் இருந்து ரயில் சேவை தொடங்கப்படும்.  சென்னை எழும்பூர், மதுரை, சேலம், பாலக்காடு, திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் சுமார் 109.55 கோடி செலவில் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில்வே ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு  வருகிறது. அதன் காரணமாக ரயில் விபத்துகள் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், பயிற்சி தரப்பட்ட நாய்கள் எவ்வாறு வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கின்றன. அதை எவ்வாறு வீரர்கள் செயலிழக்க வைக்கின்றனர் போன்ற சம்பவங்கள் தத்துரூபமாக பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டன. இந்த விழாவில்  ரயில்வே தொழிற்சங்க தலைவர் கண்ணையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: