சென்னை: ஊரப்பாக்கம், வள்ளியம்மை தெருவை சேர்ந்தவர் பூபதி (45). இவரது மனைவி புஷ்பா (38). தம்பதிக்கு டிங்கு நிஜந்தன் என்ற மகன், பூஜா என்ற மகள் உள்ளனர். சென்னை, குடிநீர் வாரியத்தில் பூபதி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் ஊரப்பாக்கம்-ஆதனூர் சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் எதிரில் பூபதி நின்று பைக்கை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் திடீரென பூபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பூபதிக்கும், அவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் பூபதியை சுற்றிவளைத்து பிடித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர். இதில் பூபதி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.