புதுக்கோட்டை: புதுக்கோட்டை, அரசு போக்குவரத்து துறையில் பயணிகளிடம் இருந்து டிக்கெட் கட்டணத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் இன்சூரன்ஸ் பணம் என்ன செய்யப்படுகிறது என்று தொழிலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி. இலுப்பூர், ஆலங்குடி, கந்தர்வகோட்டை, பொன்னமராவதி உள்ளிட்ட 12 போக்குவரத்து பணிமனைகள் செயல்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்படட பேருந்துகள் இயக்கப்படுகிறது. புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், நாமக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தமிழ்நாடு போக்குவரத்து துறை தமிழகம் முழுவதும் பேருந்து கட்டணங்களை உயர்த்தியது.
இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு ஏற்பட்டது. மேலும் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என போராட்டங்கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேருந்து கட்டணத்தை உயர்த்திய போது பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு காப்பீடு தொகையும் சேர்த்து வசூல் செய்யப்பட்டுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ரூ. 6 டிக்கெட் கட்டணம் என்றால் அதில் 50 பைசா காப்பீடு தொகையாக செலுத்தப்படும். இதேபோல் ரூ.10 கட்டணம் என்றால் ரூ.1 காப்பீடு தொகையாக செலுத்தப்படும் என்று சொல்லப்பட்டது. இதன்படி டிக்கெட் கட்டணத்தின் தொகையை பொருத்து காப்பீட்டு பணம் அதிகரிக்கும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி தற்போது பயணிகளிடம் காப்பீடு தொகை வசூல் செய்யப்படுகிறது. ஆனால் இப்படி வசூல் செய்யப்படும் தொகை என்ன ஆகிறது என்று தெரியவில்லை. இதனை போக்குவரத்து துறை முறையாக கையாளவில்லை என்று குற்றசாட்டுகின்றனர்.