சின்ன வெங்காயம் அறுவடை துவக்கம் வரத்து அதிகரிப்பால் விலை குறையும்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் வாழையில் ஊடுபயிராக பயிரிடப்பட்டுள்ள சின்னவெங்காயம் அறுவடைப்பணி தொடங்கியுள்ளதால் வரத்து அதிகரித்துள்ளது. விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இம்மலைப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் வரலாறு காணாத விலை உயர்வை தொட்டதால் விவசாயிகள் வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.

வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் ஊடுபயிராக சின்னவெங்காயம் பயிரிட்டுள்ளனர். 3 மாத கால பயிரான சின்ன வெங்காயம் தற்போது அறுவடை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. வாழையில் ஊடுபயிராக பயிரிடப்பட்டள்ள சின்ன வெங்காயம் கூலித்தொழிலாளர்களை கொண்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. வெங்காய வியாபாரிகள் தாளவாடி பகுதியில் முகாமிட்டு வெங்காயத்தை விலை பேசி வாங்கி விற்பனைக்கு அனுப்பும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது விவசாயிகளிடமிருந்து சின்ன வெங்காயம் கிலோ ரூ.50 முதல் 60 வரை விலை பேசி வாங்கி செல்கின்றனர். அறுவடையின் காரணமாக வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: