சென்னை: குடியரசு தினத்தை சீர்குலைக்க தீவிரவாதி காஜா மொய்தீனின் கூட்டாளிகள் இருவர் பெரியமேட்டில் பதுங்கியுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் ேநற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஷ் குமார் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான காஜா மொய்தீனை கடந்த வாரம் டெல்லி போலீசார் கைது செய்தனர். பின்னர், அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு இருந்ததும், தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன் எனபதும் தெரிய வந்தது. மேலும், காஜா மொய்தீன் சென்னை பெரியமேட்டில் தங்கி இருந்த போது, அவரது நண்பர் ஒருவர் துப்பாக்கி கொடுத்ததாகவும், குடியரசு தினத்தன்று தமிழகத்தில் பல இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடத்த மற்றொரு நண்பர் தயார் நிலையில் இருந்ததாகவும் காஜா மொய்தீன் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.