தண்டையார்பேட்டையில் டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து: 4 மணி நேரம் மின் வினியோகம் பாதிப்பு

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி முதல் சுமார் 4 மணி நேரத்துக்கு மின்தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். ஆர்.கே.நகர் மின்வாரிய அலுவலகத்துக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை கருணாநிதி நகர், துர்காதேவி நகர், நேதாஜி நகர், சிவாஜி நகர், அஜிஸ் நகர், சேணியம்மன் கோயில் தெரு, வஉசி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென மின்தடை ஏற்பட்டது. தண்டையார்பேட்டை பவர்ஹவுஸ் மின்வாரிய அலுவலகத்தில் மின்பகிர்ந்தளிக்கும் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மேற்கண்ட பகுதிகளில் இரவு 8.30 முதல் நள்ளிரவு 12.30 மணிவரை மின் இயந்திரங்களை பழுதுபார்க்கும் பணி நடைபெற்றதால் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மேற்கண்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் மின்சாரம் இன்றி, சுமார் 4 மணி நேரம் பெரிதும் அவதிப்பட்டுள்ளனர். இதன்பிறகு மின் இயந்திரங்கள் பழுதுபார்க்கப்பட்டு நள்ளிரவு ஒரு மணியளவில் அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: