பொதுத்தேர்வு நெருங்கிவிட்டதால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தம்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் இலவச நீட் பயற்சி வகுப்புகள் நிறுத்திக்கொள்ளப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நெருங்கிவிட்டதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.  நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. அதனை கருத்தில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடந்த 2017 - 2018ம் கல்வி ஆண்டு முதல் இலவச நீட் பயற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இலவச நீட் பயற்சி வகுப்புகளில் பயின்ற மாணவர்களில் கடந்த 2017 - 2018ம் கல்வி ஆண்டில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை.

2018 - 2019ம் ஆண்டில் 5 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 2019 - 2020ம் கல்வி ஆண்டுக்கான நீட் பயற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் 412 மையங்களில் நடத்தப்பட்டு வந்தன. வார இறுதி நாட்கள், காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் மட்டும் நீட் பயற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மொத்தம் 27 நாட்கள் மட்டுமே நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், நீட் பயிற்சி வகுப்புகளை நிறுத்தி கொள்வதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுக்கான செய்முறை தேர்வு தொடங்கி இருப்பதாலும், விரைவில் பொது தேர்வுகள் வர இருப்பதாலும் நீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகளை நிறுத்தி கொள்வதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: