புதுடெல்லி: உபர் ஈட்ஸ் இந்தியா நிறுவனத்தை ரூ. 2500 கோடிக்கு சொமாட்டோ நிறுவனம் வாங்கி விட்டது; இனி உபர்ஈட்ஸ் பெயரில் உணவு டெலிவரி இருக்காது; சொமாட்டோ ஆப் மூலம் தான் உணவு டெலிவரி கிடைக்கும். இந்தியாவில் ஓட்டல் உணவுப்பண்டங்களை வீட்டுக்கே டெலிவரி செய்யும் பிசினசை சொமாட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் செய்து வந்தன. வாடகை டாக்சி பிசினஸ் செய்யும் உபர் நிறுவனமும், உபர் ஈட்ஸ் பெயரில் உணவு டெலிவரி செய்து வருகிறது. மூன்று நிறுவனங்களும் ஆன்லைன் ஆப்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி வர்த்தகத்தை நடத்தி வந்தன. இந்திய உணவு டெலிவரி சந்தையில், சொமாட்டோ நிறுவனத்துக்கு 52 சதவீதமும், ஸ்விக்கிக்கு 43 சதவீதமும் உள்ளது. உபர் ஈட்ஸ்க்கு பெரிய அளவில் சந்தை இல்லை. சமீபத்தில் ஸ்விக்கி வெளியிட்ட அறிக்கையில், எங்களுக்கு சந்தையில் 60 சதவீதம் வர்த்தகம் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தது.