சென்னை: தண்டையார்பேட்டையில் சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த 27 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்ட தடை விதித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் எம்.ஆர்.தியாகராஜன். மீனவர் நலச்சங்க தலைவராக உள்ளார். இந்நிலையில் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சென்னை தியாகராய நகரில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனம் ஒன்று தண்டையார்பேட்டையில் 27 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருகிறது. சுற்றுச்சூழல் அனுமதி இன்றி கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த கட்டிடம் கடற்கரையில் இருந்து 80 மீட்டர் தூரத்தில் கட்டப்படுவதால் பருவமழை காலங்களில் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கட்டப்படும் இந்த கட்டிடம் கட்டுவதற்கு தடை விதிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.