முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது: பட்ஜெட் குறித்து முக்கிய ஆலோசனை

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையின் 2020ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இதையடுத்து 3 நாள் கவர்னர் உரை மீது விவாதம் நடைபெற்று 9ம் தேதி பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று மாலை 4.30 அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. இந்தாண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. பட்ஜெட்டை எப்போது தாக்கல் செய்யலாம், பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடலாம் என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

மேலும், தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, ஒற்றை சாளர முறையை முழுவதுமாக நடைமுறைபடுத்துவது, பதிவு கட்டணத்தை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படுகிறது. மேலும், தற்போதைய சூழ்நிலையில், தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு நிலை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories: