சென்னை: குண்டூரில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் பிஸ்ட்பால் போட்டியில் சிறுவர்கள், சிறுமிகள் என இரண்டு பிரிவுகளிலும் தமிழ்நாடு அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன. தேசிய அளவிலான 10வது ஜூனியர் பிஸ்ட்பால் போட்டி ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் மங்களகிரியில் நடந்தது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட 16 மாநிலங்களில் இருந்து அணிகள் பங்கேற்றன. போட்டிகள் சிறுவர், சிறுமிகள் என 2 பிரிவுகளாக நடந்தது. சிறுவர்களுக்கான இறுதிப் போட்டியில் தமிழ்நாடு-புதுச்சேரி அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு 11-8, 11-6 என்ற நேர்செட்களில் புதுச்சேரி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. முன்னதாக நடைபெற்ற 3, 4வது இடங்களுக்கான போட்டியில் தெலங்கானா அணி கேரளாவை வீழ்த்தி 3வது இடத்தை பிடித்தது.