ஈரோடு: முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதி. இவர் நேற்று திருச்சியில் இருந்து தனது காரில் ஈரோட்டில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த மணவாசி சுங்கசாவடியில் அவரது கார் நின்றது. அவரிடம் சுங்க சாவடி ஊழியர்கள் ‘பாஸ்டேக்’கை கேட்டு உள்ளனர். இதையடுத்து பாலபாரதி பணம் கட்டி செல்லும் கியூவில் காரை நிறுத்தி உள்ளார். எனினும், ஊழியர்கள் விடாமல் ‘பாஸ்டேக்’தான் வேண்டும் என்று கெடுபிடி செய்து உள்ளனர். மேலும் அங்கு இருந்த பாதுகாவலர் கைத்துப்பாக்கியுடன் பாலபாரதியிடம் பேசி உள்ளார்.இதையடுத்து பாலபாரதி கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அவர்கள் சுங்க சாவடி மேனேஜரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். உடனடியாக அவர் விரைந்து வந்து பாலபாரதியை அனுப்பி வைத்துள்ளார்.