தூத்துக்குடி அருகே பரபரப்பு எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி குவார்ட்டர், பிரியாணி தரப்படும்: ரேஷன் கடை கரும்பலகையில் எழுதிய மர்மநபர்கள்

புதுக்கோட்டை: சூசைபாண்டியாபுரம் ரேஷன் கடையில், எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி, குவார்ட்டர், பிரியாணி வழங்கப்படுமென கரும்பலகையில் எழுதப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் உள்ள சூசைபாண்டியாபுரத்தில் அமுதம் நியாய விலைக்கடை உள்ளது. இங்குள்ள கரும்பலகையில், நேற்று மர்ம நபர்கள் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு குவாட்டர் மற்றும் பிரியாணி வழங்கப்படும் என எழுதியுள்ளனர். காலையில் அவ்வழியாக சென்ற மக்கள், இந்த வாசகத்தை பார்த்ததும் அதிர்ச்சிக்குள்ளாயினர். இது உண்மைதானா? என தங்களுக்குள் விவாதங்களில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் சூசைபாண்டியாபுரம் அதிமுக கிளை செயலாளர் தொம்மை மிக்கேல் புதுக்கோட்டை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சூசைபாண்டியாபுரம் ரேஷன் கடையருகே பள்ளிக்கூடமும் செயல்படுகிறது. சமீபகாலமாக இப்பகுதியில் இரவு நேரங்களில் குடிமகன்கள் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. திறந்தவெளி பாராகவும் பயன்படுத்தி விட்டு கட்டிடங்களை சுற்றி பாட்டில்களை உடைத்து போடுகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் அச்சத்திலேயே வசிக்கின்றனர். பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர். கஞ்சா விற்பனையும் நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும் பொது இடங்களில் மர்மநபர்கள் இதுபோன்ற பல்வேறு வாசகங்களை எழுதிச் செல்வதும் வாடிக்கையாகி விட்டது. எனவே போலீசார், இந்த பகுதியில் ரோந்து பணியை அதிகரித்து சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: