சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தலில் பல அக்கிரமங்கள் நடந்தாலும், அதையும் தாண்டி நாம் வெற்றி பெற்றோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வல்லக்கோட்டை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் குமார் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் கோபால், கருணாநிதி, மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொங்கல் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் அடுப்பை ஏற்றி வைத்து, சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். இதையொட்டி வழி நெடுகிலும் வாழை, மா, இலை, கரும்பு மற்றும் பழ வகைகளை தோரணமாக அமைத்திருந்தனர். இதில் பரதநாட்டியம், தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், சிலம்பாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.