சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழப்புகளை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி 2017ம் ஆண்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் விதிகளுக்குட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டங்களின் கலெக்டர்களிடமிருந்து சுகாதாரத்துறைக்கு மருத்துவக்குழு அனுப்பி வைக்குமாறு, வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்படி பொது சுகாதாரத்துறை அதிகாரிகள், உள்ளாட்சித்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களை முதல்கட்டமாக ஆய்வு செய்தனர். அங்கு தண்ணீர் சப்ளை, கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வுசெய்தனர். அதிநவீன உயிர்காக்கும் உபகரணங்கள் அடங்கிய 108 ஆம்புலன்ஸ் ஒன்று தயார் நிலையில் வைக்கப்படும்.