நாமகிரிப்பேட்டை: பொங்கல் பண்டிகைக்கு ஒரு சில நாட்களே உள்ளதால், நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டியில் மண்பானை தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டியில், சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொங்கல் பானை, அகல் விளக்கு, தண்ணீர் பானை, மண் அடுப்பு உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் தயாரிக்கப்படும் மண்பாண்டங்கள் அழகாகவும், உறுதியாக இருப்பதால் நாமக்கல், சேலம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் நேரடியாக வந்து வாங்கிச்செல்கின்றனர். பொங்கல் பண்டிகைக்கு ஒரு சில நாட்களே உள்ளதால் பொங்கல் பானை, மண் அடுப்பு தயாரிப்பு பணிகளில், தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.