காட்டுமன்னார்கோவில் தொகுதி வழக்கு தபால் வாக்குகளுடன் தேர்தல் அதிகாரி ஆஜராக வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை : காட்டுமன்னார்கோவில் தொகுதி தேர்தல் அதிகாரி ஓய்வுபெற்று விட்டதால், 2016ல் நடந்த தேர்தலில் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் தற்போதைய தேர்தல் அதிகாரி ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் போட்டியிட்ட தலைவர் திருமாவளவன் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி  சி.வி.கார்த்திகேயன், நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால், அந்த தபால் வாக்குகளுடன் ஜனவரி 20ம் தேதி தொகுதி தேர்தல் அதிகாரி முத்துகுமாரசாமி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  காட்டுமன்னார்கோவிலில் தேர்தல் அதிகாரியாக இருந்த முத்துகுமாரசாமி ஓய்வு பெற்று விட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் தற்போதைய தேர்தல் அதிகாரி ஆஜராகுமாறு நீதிபதி  உத்தரவிட்டார்.

Related Stories: