தா.பேட்டை: திருச்சி அருகே மது குடித்த 2 பேர் பலியானார். ஒருவர் மருத்துவமனையில்தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே கண்ணனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தாமோதரன் (55), சரவணன் (30), சதீஷ் (30). கூலித்தொழிலாளர்களான 3 பேரும் கண்ணனூர் பகுதியில் உள்ள ஒரு சலூன் கடையில் திருட்டுத்தனமாக அனுமதியின்றி விற்கப்படும் மது பாட்டில் ஒன்றை வாங்கி அந்த பகுதியில் 3பேரும் பங்கிட்டு குடித்துள்ளனர். சதீஷ் மட்டும் சொந்த வேலை காரணமாக துறையூருக்கு சென்றுள்ளார். இதில் மது குடித்த சிறிது நேரத்திலேயே சரவணனும், தாமோதரனும் சுருண்டு கீழே விழுந்தனர். சம்பவ இடத்திலேயே சரவணன் பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய தாமோதரன் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.