தமிழகத்தை உயர்த்தும் கடமை ரஜினிக்கும் உள்ளது : கமல்ஹாசன் பேட்டி

சென்னை:  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சென்னையில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், மிகுந்த கவலைக்கு இடமளிக்கக்கூடியது. மாணவர்களுக்கு ஒருநேரம் வந்தால், இது பெரும்பீதியை கிளப்பும் விஷயம். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அநீதியாகவும் இருக்கிறது. இன்னும் இதற்கும்மேல் சொல்லிக்கொண்டே போகலாம். குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே போகலாம். இந்த சர்வாதிகார  தாக்குதல்  நிலை மாற வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு வந்தால் அதிமுக எதிர்க்கும் என்று கூறுகிறது. அவர்களது பேச்சு, எதை நோக்கி செல்கிறது, அவர்களது இலக்கு என்ன என்பது தெரியவில்லை. அவர்கள் நடத்தும் வியாபாரம், தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு மாறி மாறி பேசுகின்றனர்.

தமிழ் சமுதாயம் முன்னேற தமிழர்கள் அனைவரும் உதவி செய்ய வேண்டும். இதில் அனைவரின் பங்கீடும் இருக்க வேண்டும். உழைப்பை, வியர்வையை முதலீடு செய்ய வேண்டும். உயர்ந்தவர்கள், தங்களது செல்வத்தை கொடுத்து தமிழகத்தை உயர்த்தி தூக்கி கொண்டு வந்து, அது இருக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும். இது எல்லோருடைய கடமையுமாகும். அந்த கடமை ரஜினிக்கும் உள்ளது. ஆங்கிலோ இந்தியர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினருக்கும் சட்ட சபையில்   பிரதிநிதித்துவம் வேண்டும். நாடோடி இனத்தை சேர்ந்தவர்கள்  பலர் இருக்கின்றனர்.  அவர்களும் தமிழர்கள்தான். அவர்களுக்கு தமிழ்மொழியை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. இங்கிருந்து வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும். தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேச எந்த கட்சியையும் அனுமதிக்கவில்லை. இது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

Related Stories: