சென்னை: சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் ஒப்பந்தம் வழங்கியதில் 590 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் 3800 சாலைகள் அமைப்பதற்காக 48 டெண்டர்களும், 290 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் கட்டுவதற்காக 73 டெண்டர்களும் கடந்த 2018ம் ஆண்டு கோரப்பட்டது. இந்த டெண்டர்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இது சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்ய கோரி அறப்போர் கட்டளை நிர்வாக அறங்காவலர் ஜெயராமன் வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டாக சேர்ந்து செயல்படுவதாகவும், சில ஒப்பந்ததாரர்கள் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு டெண்டர் வழங்கப்பட்டதாகவும், தொடர்ந்து, டெண்டர் விதிகளை மீறப்பட்டுள்ளதாகவும் கூறி 2018 நவம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்ததாகவும், மேலும் அந்த புகாரின் ஆரம்பகட்ட விசாரணை மேற்கொள்ள அனுமதி கோரி தலைமை செயலாளருக்கு லஞ்சஒழிப்புத்துறை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார்.