புதுடெல்லி: நாடு முழுவதும் நடத்தப்பட உள்ள வீடுகள் கணக்கெடுப்பின்போது, டாய்லெட், டிவி, வாகனங்கள், போன் எண்கள் உட்பட 31 கேள்விகளை அதிகாரிகள் கேட்க உள்ளனர். நாடு முழுவதும் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணி இந்தாண்டு செப்டம்பரில் இருந்து தொடங்கப்பட உள்ளது. இதில், இந்தியாவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை மட்டுமே கணக்கெடுக்கப்படும். அதற்கு முன்பாக, வீடுகளை மட்டும் கணக்கெடுக்கும் பணியை மத்திய கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் தொடங்க உள்ளது. இந்த கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் 1ம் தொடங்கி, செப்டம்பர் 30 வரை நடக்கிறது. இது தொடர்பாக பதிவாளர் ஜெனரல் மற்றும் கணக்கெடுப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வீடுகள் கணக்கெடுப்பின் போது ஒவ்வொரு வீட்டிலும் உள்ள டாய்லெட் வசதி, டிவி, இன்டர்நெட், சொந்த வாகனங்கள், குடிநீர் ஆதாரம், குடும்ப தலைவரின் போன் எண் உட்பட 31 கேள்விகளை அதிகாரிகள் கேட்டு பதிவு செய்ய வேண்டும். கணக்கெடுப்புக்காக மட்டுமே போன் எண் கேட்கப்படுகிறது. வேறு எந்த காரணத்துக்காகவும் அல்ல.