சென்னை: பொங்கல் பண்டிகைக்கு பாசி பருப்பு தேவை அதிகரித்துள்ள நிலையில், வரத்து குறைவால், அதன் விலை ஒரே வாரத்தில் கிலோ 17 வரை உயர்ந்துள்ளது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பாசி பயிறு, பருப்பின் தேவை அதிகரித்துள்ள நிலையில், மார்க்கெட்டுக்கு வரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை மார்க்கெட்டுகளுக்கு வாரத்துக்கு 150 லாரிகளில் விற்பனைக்கு வந்து கொண்டிருந்த பாசி பருப்பின் வரத்து படிப்படியாக சரிந்து தற்போது, 50 லாரிகளில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்குவதால், பாசி பருப்பின் தேவை அதிகரித்துள்ள நிலையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விலை உயர்ந்து வருகிறது.